Pages

Sunday, July 28, 2013

செருப்படி வாங்குவ !

ஹரி சற்றும் எதிர்பாராமல் ஒரு அரை சுஜாவிடமிருந்து,நட்டநடு பார்க்கில் அமைதியான அந்த இடத்தில இந்த சத்தம் அங்கே தொப்பையை குறைக்க ஓடும் அங்கில்களும் நடக்கும் ஆண்ட்டிகளும் மறைவில் அமர்ந்து காதலிக்கும் ஜோடிகளும் பள்ளியை கட்டடித்து கதையடிக்கும் மாணவர்களும் பேரனை விளையாட அழைத்துவந்து இவை எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் பணிஓய்வு பெற்ற தாத்தா என அனைவரும் ஹரியை பார்த்துகொண்டிருந்தனர் . மவுண்ட் ரோடு சிக்னலில் ஜட்டி கூட இல்லாமல் நிற்பதுபோல் இருந்தது ஹரிக்கு .எதையும் கண்டுகொள்ளாமல் விறு விறுவென பார்க்கின் கேட்டை தாண்டியிருந்தாள் சுஜா .பள்ளிகளின் ஒரு நிமிட மௌன அஞ்சலி போல் அந்த ஒரு நிமிடம் ஹரி தன்னிடம்  பொறுமை,வெட்கம்,மானம்,சூடு,சொரணை இவையெல்லாம் இருப்பதாய் உணர்ந்தான்,தலை குனிந்தபடி வேக வேகமாய் நடந்தாலும் பார்க்கை கடக்க ஒரு ஜென்மம் ஆனது ஹரிக்கு .

இதோடு ஆறு மாதமாக சுஜாவை பின்தொடர்ந்து அவள் போகுமிடமெல்லாம் சென்று  கடிதம் கொடுப்பது,ஜொள் வடிப்பது,செய்கைகளை தூர நின்று ரசிப்பது,கவிதை எழுதுவது,அருகே செல்லாமல் எப்படியெல்லாம் காதல்  செய்வதென்று ஹரிக்கு நன்றாக தெரியும்,சரியாக அவள் நேரத்திற்கு முன்பாகவே பேருந்துநிறுத்தம் வந்தடைந்து அவள் ஏறும் பேருந்தில் ஏறி அவள் இருங்குமிடம் வரை சென்று வழி அனுப்பிவைத்து அரைக்கு திரும்புவான் ,அன்றிரவு அவள் வீட்டை கடக்கும்போதுதான் அவள் பெயர் சுஜா என கண்டுபிடித்தான்,அவள் வீட்டை சுற்றி லோக்கல் கைகள் அதிகம்அவைகளை கடக்கும்போதெல்லாம் ஹரியின் இதயத்துடிப்பு அதிகமாகும், ஹரியின் மிக பெரிய சாதனை முதல் நாளே  அவள் வீட்டை கண்டுபிடித்ததுதான்,அவளின் இதழோர சிரிப்பில் மயங்கி கண்களில் காதலை கண்டான், ஹரியின் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் அவளை கண்டதிலிருந்துதான் அனைத்தும் ஆரம்பமானது.

கல்லூரியை கனவுகளில் மட்டுமே காண முடிந்தது,ஏனெனில் கடைசி பருவ தேர்வின் கடைசி தேர்வு முடிந்து தனது முதல் வருட மிச்ச சொச்சங்களை முடிக்க அரையில் தான் மட்டும் படிக்க முடியாமல் (மூடில்லாமல்) தூங்கி கழித்திருந்தான் நேரத்தை,இப்போதெல்லாம் பெண்களின் மேல் நாட்டம் கொண்டிருந்தான் ஹரி ,நாட்டம் அதிகமாக தொடங்கிய நேரம் முக்கிய பொழுது போக்காக பேருந்து நிறுத்தத்தில் போய் ஒரு மணி நேரம் போல் சைட் அடிப்பது வழக்கப்படுத்தி கொண்டிருந்தான், கடைசி பருவ தேர்வு ஆரம்பித்ததிலிருந்தே ஹரிக்கு பீதியும் ஆரம்பித்திருந்தது,இந்த தேர்விற்காக தன் நண்பர்கள் சென்ற சுற்றுலாவிற்கு கூட செல்லவில்லை ,தன் நண்பர்களுடன் சேர்ந்து கடைசியாக பரிசோதனை தேர்வை முடித்து வகுப்பின் அனைத்து ஆண்மக்களும் ஒன்றுகூடி தண்ணி அடித்ததுதான் கல்லூரியின் கடைசி சந்தோசமான நாளாக கருதினான்.இந்தமுறையும் வீட்டில் தன் பாடங்களில் மிச்ச சொச்சம்மாக 21 பேப்பர் இருப்பதை மறைத்து ஹால்டிக்கெட் வாங்க வழக்கம்போல் 4 பேப்பர் என்று பொய் சொல்லிதான் பணம் வாங்கினான் ஹரி .

கல்லூரியின் கடைசி பருவம் தொடங்கியிருந்தது அன்று தனது விடுதி நண்பர்களுடன் தண்ணி அடித்து அனைவரும் பொலம்பி ஓலம்பிகொண்டிருந்தனர் மிகவும் சூடாக பேசி முடித்த பிறகு கடைசியாக "மூன்றரை  வருஷம் எப்டி போச்சுன்னே தெரில மச்சி "என ஹரி கேக்க டேய் வெண்ண போன வருஷமும் இததான டா சொன்ன என்று ஹரியின் வாயை மூடினான் நண்பனொருவன் .எல்லா பழக்கத்தையும் தெரிந்து கொண்டு விட்டுவிடத்தான் திட்டம் ஆனால் அவனையறியாமல் அதனுள் மூழ்கிபோயிருந்தான் ஹரி , எல்லாவற்றிற்கும் காரணம் தன் மிச்ச சொச்சம் தான் என நண்பர்களிடம் அடிக்கடி பொலம்புவான் ஹரி , "மிச்ச சொச்சம்" கல்லூரியின் முதல் பருவ தேர்விலிருந்தே ஹரியை தொரத்தி தொரத்தி கடித்துகொண்டிருக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத மிருகம் ஏன் எதனால் எதற்கு என கண்டறிய முடியாத தாக்குதல்கள் அனைத்தும் .பயம்தான் ஹரிக்கு கல்லூரி தொடங்கிய நாட்களிலிருந்தே தன் புத்தகங்களை பார்த்து,பள்ளியில் இருந்தது போலவே.

அவ்வளவு சிறந்த படிப்பாளியெல்லாம்  இல்லை ஹரி பள்ளியிலும் ,தப்பி தவறி கும்பலோடு கும்பலாக தேர்ச்சி பெற்று வந்தவன்தான் ,ஒவ்வொரு பொதுதேர்வும் ஒவ்வொரு உலகப்போர்தான் யாரோ ஒரு நல்ல தேரோட்டி கிடைத்ததால்தான்  தேர்ச்சிபெற்றான் ஹரி பன்னிரெண்டிலும் பத்திலும் தேர்ச்சிபெற்றது அனைத்துமே ஒரு கனவுதான்,படிப்பின் மேல்தான் ஆர்வம் இல்லையென்றால் எதன் மீதும் ஆர்வம் இல்லாமலிருந்தான் ,ஒரு பெண்ணை சும்மா கூட பார்க்க மாட்டான் ,தேவை இருந்தால் மட்டும் தேவையானதை மட்டும் பேசுவான், செய்வதெல்லாம் பெண்களுக்கு தான் தீங்கிழைப்பதாய் நினைப்பான்,ஒரு முறை ஹரியின் வகுப்பறையில் ஹரியின் நண்பனொருவன் அந்த முன் பெஞ்ச்சு கமலாவை காதலிப்பதாக கூறியதும் பைத்தியக்காரன்போல் உடனே அந்த பெண்ணிடம் போட்டு கொடுத்துவிட்டான்,அந்த பெண் குமாரை நார் நாராய் கிழித்ததுதான் மிச்சம்.அது போதாதென்று அந்த பெண் வீட்டிலிருந்து வேறு வந்து கிழித்து விட்டனர் பள்ளியை ,இதனால் ஹரிக்கும் அவன் நண்பன் குமாருக்கும் பெரிய சண்டை எல்லாவற்றிற்கும் சேர்த்து பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்திருந்தனர் இருவரையும் , கடைசியாக குமாரு ஹரியிடம் கூறிய வார்த்தைகளை ஹரி எப்போதும் மறந்தது இல்லை "சத்தியமா  சொல்றேன் உனக்கெல்லாம் வாழ்க்கைல லவ்வே வராது அப்படியே வந்தாலும் அவ கையாள செருப்படிதான் வாங்குவ" 
இந்த வார்த்தைகளை ஹரி மறந்ததே இல்லை எப்போதும்.





No comments: